மழலைக்கு வாழ்த்து
ஆலயத்தின் மணியோசை பிறந்த நாள்
வாழ்த்தொலித்து அடுத்தடுத்து அடிக்கிறது
பாடுகின்ற பறவைகளும் கூவுகின்ற குயில்களும்
உனக்காக பூபாளம் இசைக்கிறது
அடுத்தடுத்து அணிவகுத்து வருகின்ற
அலைகளெல்லாம் தப்பாமல்
உன் பெயரை எழுதி தாளமடிக்கிறது
காவிருக்கும் பூக்களெல்லாம் கணக்கின்றி பூத்து
நின்று உன் கூந்தலுக்கு தவமிருக்கிறது
முகில்கிழித்து வெளிவந்த முழுமதியோ
உன் முகப்பொலிவில் மயங்கி
முத்த மழை பொழிகிறது
வானத்து விண்மீன்கள் வரிசையிலே
வந்துநின்று உனை வாழ்த்திச் செல்கிறது
வீசுகின்ற தென்றலும் உன் வாசல் வரை வந்து
வாஞ்சையோடு உனை வருடி வாழ்த்துக்கள் சொல்கிறது
கதிரவனும் காலையிலே கணக்காக எழுந்து வந்து
கண்ணே உனை வாழ்த்துகிறது
இயற்கையெல்லாம் உனை வாழ்த்தி விட
தவழ வைத்த மண் பெருமை
தரணியெங்கும் எதிரொலிக்க
அமுதமென்னும் தமிழ் கொண்டு
அன்பே உனை வாழ்த்துகிறேன்
வருங்காலம் நமதென்று புவியாள
வந்தவளே பறை சாற்று
இனமான உணர்வு தமிழர்
இல்லமெல்லாம் - அவர் தம்
உள்ளமெல்லாம் வளர
பேரிகையை முழக்கு
வாழ்க வளமுடன்
பல்லாண்டு நலமுடன்
----த . சத்தியமூர்த்தி