மானுடம் தரிப்போம் -2
கள்ளமில்லா புன்சிரிப்போடு
கை , காலை ஆட்டி புத்தம் புது பூவாய்
மழலையாய் மண்ணுக்கு வந்தோம் ..
தாயின் மடியை அரவணைத்து
மிரள மிரள இம்மண்ணைப் பார்த்தோம்..
வளர , வளர , ஆசையில் விழுந்து
பேராசையை தினம் விதைத்து
காம , கோப ,கொடூரத்தை வளர்த்து,
மனதை மயக்கும் பணமெனும் ஒற்றை
மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு அதற்காக
நாயாய் , பேயாய் ,அலைந்து திரிந்து ,
நய வஞ்சகங்கள் கோடி புரிந்து ,
நல்லோர் மனதை நடுங்கச்செய்து..
தான் , தனது, தன் குடும்பமெனும்
குறுகிய வட்டத்தில் சுருங்கி
சொந்த பந்தங்களை ஒதுக்கி
உறவுகளை உதறித்தள்ளி
ராஜபோகமாய் சில காலம் வாழ்ந்து
பண்ணிய பாவத்தின் பலனாய்
தேகப்பொலிவிழந்து , குடும்பத்திற்கு பாரமாகி
பாயில் விழுந்து , நோய் முற்றி
வெறுங்கையோடு மீண்டும்
மண்ணுக்குள் புதைந்தோம் !
மானிடா !
உன் பிறப்பின் மகிமையைப் பார்த்தாயா ?
யாருக்கும் உன்னால் ஒரு பயனும் இல்லையென்றால்
உன் பிறப்பு எதற்கு ?
பல தலைமுறைக்கு சொத்து சேர்க்கும்
கனவான்களே !
கொஞ்சம் எடுத்து ஏழைக்கு தர்மம் செய்தால்
உங்கள் ஆஸ்தி என்ன குறைந்தா போகும் ?
உங்கள் அஸ்தியோடு கூட வருவது
நீங்கள் செய்த தர்மம் மட்டுமே !
மானுடம் தொடரும்..
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment