வாழ்க்கை -2
வாழ்க்கையின் அடிச்சுவட்டை ஆராய்ந்து
பார்க்குங்கால் வினோத நிகழ்வுகள் தாராளம்
விபரீத நகர்வுகள் ஏராளம்
இல்லாதவனை இகழ்வதும்,
இருப்பவனைப் புகழ்வதும்,
வறியோனை வாட்டுவதும் ,
வலுத்தவனை கொழுத்தவனாக்குவதும்,
காசுக்காக காவடி எடுப்பதும்,
பல்லிளித்து பல்லக்கு தூக்குவதும்,
எப்படியேனும் வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டுமென வெறிகொண்டு அலைவதும்,
வாழ்க்கையே !! நீ விபரீதக் கண்ணாடி -- அதன்
முன்னாடி நின்று பார்க்கும்போது தான் நம்
முகமூடி கிழிந்து முழுவடிவம் தெரியும்.
இலட்சியத்தோடு வாழ்பவனை,
கொள்கையோடு நடப்பவனை,
உண்மையோடு இருப்பவனை,
உயிரோடு இருக்கும் காலம் மட்டும்
கண்டுகொள்ளாத உலகம்
வரலாற்றில் அவன் பெயரை
பொன்னெழுத்தில் பதிக்கும்
பிழைக்க தெரியாதவன் என்று
பிதற்றுபவன் எல்லாம்
வாழும் காலத்தில் வசதியோடு இருந்தாலும்
மூச்சடங்கி முடித்தபின்னே,
கூட்டத்தில் ஒருவராகி காணாமல் போயிடுவர்.
வாழ்க்கை சொல்லித்தரும்
அரிய தத்துவம் இதுவே !!
வாழும் காலத்திற்கு பின்பும்
வரலாற்றில் அழுத்தமாய்
நம் பெயர் பதிப்போம்.
வரலாற்றில் இடம் பிடித்து
சாதனை படைப்போம்.
---த .சத்தியமூர்த்தி