தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே ,
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
-- பாரதி வாக்கு
உழவையும் , நெசவையும் உயர்த்திப் பிடித்து
ஊருக்கே உணவளித்த தமிழ் நாடு
தேமதுர தமிழோசை தெருவெல்லாம்
ஒலிக்கச் செய்த தமிழ் நாடு
நெல்லும் , கரும்பும் , மஞ்சளும் மணக்கும்
மாண்புகழ் கொண்ட தமிழ் நாடு
மொழியையும் , மண்ணையும் , விழி போல
காத்த நம் தமிழ் நாடு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என
போதித்தது நம் தமிழ் நாடு
குடவோலை முறையைக் கொண்டு தேர்தலை
முதலில் நடத்திக் காட்டிய தமிழ் நாடு
கணிதம் ,ஜோதிடம் , வானியல் ,வைத்தியம் ,பரதம்
சிற்பக் கலைகளில் தேர்ச்சிப் பெற்ற தமிழ் நாடு
வீரத்தின் விளை நிலமாய், வெற்றிகளைக் குவித்து
வரலாறு படைத்த நம் தமிழ் நாடு
கடையேழு வள்ளல்களையும் , வாடிய பயிரைக் கண்டு
வாடிய வள்ளலாரையும் கண்டது நம் தமிழ் நாடு
தஞ்சமென்று அடைந்த பறவைக்காக தன் தசையை
அறுத்த சிபிச் சக்கரவர்த்தி வாழ்ந்த தமிழ் நாடு
ஏனைய இடங்களில் பாமரனாய் வாழ்ந்த காலத்திலே
நாகரிகத்தோடு செழித்து வாழ்ந்தது நம் தமிழ் நாடு
காண்பவர் வியக்கும் வண்ணம் கட்டிடக்கலையில்
சாதனைப் படைத்த நம் தமிழ் நாடு
தமிழும் , தமிழரின் வரலாறும் , தமிழ்நாட்டின்
பெருமையும் யுகம் யுகங்களைக் கடந்தவை
தொன்று தொட்டுத் தொடர்பவை - நம்
உயிரோடும் , உணர்வோடும் ஒன்று கலந்தவை
வாழ்க தமிழ் நாடு ! வளர்க தமிழ் நாடு !!
வீறுகொண்டு எழுக தமிழ் நாடு ! வெல்க தமிழ் நாடு !!
----த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment