கல்வி
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
கற்க கசடற கற்றவை - கற்றபின்
நிற்க அதற்குத் தக - வள்ளுவன் வாக்கு
அன்னசத்திரம் ஆயிரம் அமைத்தல்
ஆண்டவனுக்கு ஆலையம் கட்டுதல்
பொதுவிடத்தில் குளம் வெட்டுதல்
எல்லாவற்றிக்கும் மேலாய்
ஆங்கோர் ஏழைக்கு கல்வி கற்கச் செய்வதே
அனைத்திலும் சாலச்சிறந்தது
பொன் படைத்தோர்க்கு வாழும் இடம் சிறப்பு
கற்றவர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
கல்வி மனிதர்க்கு கண்களுக்கு ஒப்பானது
கல்வி தான் மானுடத்தை உயர்ந்த நிலைக்கு செதுக்குகிறது
கல்வி தான் வறுமைக்கு விடை கொடுக்கிறது
கல்வி தான் நம்பிக்கையோடு நம்மை வாழ வைக்கிறது
கல்வி அறிவை வளர்த்து , ஆற்றலைப் பெருக்குகிறது ,
கல்வி தான் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களாகும்
பள்ளிக்கூடங்கள் அமைத்து , மதிய உணவும் அளித்து ,
சீருடைத் தந்து, மாணவர்களைச் சரிசமமாக்கி
கல்விக்குக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசரை
இக்கணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்
வாசிப்பை நேசிப்பவன் வாழ்வு வசந்தமாகும்
நல்ல நல்ல நூல்களெல்லாம் நன்னெறிக்கு வழிகாட்டும்
அனுபவம் கூட அன்றாடம் படிக்கும் பாடமாகும்
படிப்பறிவும் , பட்டறிவும் பட்டைத் தீட்டிக்கொள்ளவேண்டும்
எழுத்தறிவித்தவன் இறைவனாவான்
மக்களின் தலையெழுத்தை மாற்றுபவனே
மாபெரும் தலைவனாவான்
அறிவார்ந்த சமூகம் அமைத்து அனைவரையும் பாதுகாப்போம்
--த .சத்தியமூர்த்தி