அப்பா!
அப்பா! அப்பா! மந்திர வார்த்தையிது
மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல்
நம்மை இம் மண்ணுக்கு கொண்டு வந்தது
கடந்த காலங்களில் நம்மைப் பொத்திப் பொத்தி பாதுகாத்தது
நம் கண் அசைவை வைத்தே நம் தேவைகளை
ஒவ்வொன்றாய் பூர்த்தி செய்தது
கம்பீரமாய் கையைப் பிடித்து கடை வீதியில்
உலா வந்து மகிழ்ந்தது
ஆசை ஆசையாய் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு
வீடு வந்து சேர்ந்தது
பண்டிகைக் காலங்களில் நம்மை மகிழ்விக்க
வேண்டியதையெல்லாம் கொண்டு வந்து சேர்த்தது
அதிர்ந்து பேசாமலே ஆயிரம் விஷயங்களை
அற்புதமாய் செய்தது
நம்மை படிக்க வைத்து ஆளாக்க
படாத பாடு பட்டது
திருமணம் செய்து வைத்து நமக்கொரு
குடும்பத்தைக் கொடுத்தது
குடும்பத்தைக் கட்டிக்காக்கும் குத்துவிளக்காய் தாயிருக்க
விளக்கில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தீபமாய் எம் தந்தை
தடுக்கி விழுந்தால் தூக்கி விட தாயுண்டு ஒருகாலத்தில்
ஓடிவந்து அரவணைத்து ஆறுதல்சொல்ல தந்தையுண்டு
அதுவும் ஒரு காலத்தில்
ஆனால் இன்றோ விழுந்தாலும் , எழுந்தாலும்
அழுதாலும் ஆறுதலுக்கு நமக்கு நாம் மட்டுமே
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக
அன்பு செய்வது தாய் தந்தை மட்டுமே
நமக்காகவே காலமெல்லாம் வாழ்ந்து
நம் கண் முன்னே மூச்சடங்கி போனது
வாழ்வின் நீண்ட நெடிய பயணத்தைப் புரியவைத்து
ஒரு சிறிய படத்துக்குள் அடக்கமாகி போனார்கள்
வாழ்க எம் பெற்றோர்
--த .சத்தியமூர்த்தி