Saturday, 24 April 2021

சேரிக்கு என்று விடியல் ?(1)

                                  சேரிக்கு  என்று  விடியல் ?(1)
 
கட்சிக்கொடி  ஏற்றி  வைத்து 
காலமெல்லாம்  கஷ்டப்பட்டு
  
ஆட்சிகளை  மாற்றி  இவங்க 
ஆனவரை பார்த்துட்டாங்க 

ஆண்டு  பல  சென்றாலும் 
இவங்க  மட்டும்  குடிசையிலே 

ஊரை விட்டு  தள்ளி  வச்சி 
காலணின்னு  பேரு  குத்தி 
காலமெல்லாம்  சேரிக்குள்ளே  
வாழ்ந்துட்டாங்க ?

இவங்க  கண்டதெல்லாம்  
காத்து  மழை  இடியைத்  தாங்க 

தேர்தல்  வரும்  காலம்  மட்டும்  
தேடி வர ஆட்கள்  உண்டு  

உங்கள்  வீட்டுப்பிள்ளை  என்று 
உறவு முறை  பாடிக்கிட்டு  

ஓட்டு  கேட்கும்  உத்தமரை 
நாலடுக்கு  மாளிகை  முன்

கால் கடுக்க காத்து நின்றும்
பார்க்காமல்  போனதுண்டு 

தேசத்தோட  கௌரவமே  
சேரிக்குள்ள  அடக்கமுங்க 

காசு பணம் கம்மின்னாலும் 
குழைந்தைக்கு  குறைவில்லே 

ஆன  மட்டும்  விலகியிருந்தும்
அடுத்தடுத்து  பிறந்ததுங்க

பட்டினியில்  சிலது  செத்து 
பிணியாலே  பலது  செத்து
தப்பிச்சது  சிலது  தாங்க - அதுங்க 
ஆயுசு  ரொம்ப  கெட்டிதாங்க ..


--த.சத்தியமூர்த்தி  
 
   
    
    


    

Sunday, 18 April 2021

Vennilave

 வெண்ணிலவே !!

அன்னமொன்று  மெல்ல  மெல்ல  ஆசை தீர
ஆடி வந்து  கொஞ்சு  மொழி  பேசுகிறது 

உலவுகின்ற  தென்றலது  ஊரெல்லாம்  பவனி  வந்து 
உவகையுடன்  உள்ளமதைக்  கொள்ளைக்  கொண்டது 

மந்திரப்  பதுமையவள்  வாய்  சிறிது  மலர்ந்தாலே 
மயக்கத்தின்  உச்சிக்கே  சென்றதுண்டு 

சித்திரப்  பாவையவள்  சிரித்தாலே  போதும் 
சிந்தனையின்  கதவு  மெல்ல  சிறகடித்து  பறந்து விடும்

கண்ணிரண்டில்  புகுந்து  
என்  கருத்தெல்லாம்  நிறைந்தவளே !

பொன்னிறமாய்  மேனியெழில்  
அமைந்திட்ட  தேவதையே  !

பூத்து  நிற்கும்  புது  மலரே !
புவனத்தின்  பேரொளியே !

வார்த்தெடுத்த  உயிர்  பிழம்பே !
வட்ட  முக  வெண்ணிலவே 

அசைகின்ற பூங்கொடியே !
ஆசை  வைத்த  இளங்கிளியே !

பண்போடு  பழகுவதில் 
பட்டம்  பெற்ற  பாவையே  !

அன்போடு  உபசரிக்கும் 
அழகு  தமிழ்  ஓவியமே  !

சொல்லெடுத்து  கவி பாடும்
இளங்கவியின்  பெட்டகமே !

மணம்  பரப்பும்  மல்லிகையே !
மாலை  சூடும்  மனங்கவர்  காதலியே !

துடிக்கின்ற  உயிர்  மூச்சே !
துணையாகும்  இள  மொட்டே !

காலம்  வரும்  !   இணைந்திடுவோம் !
காவியங்கள்  பல  படைத்திடுவோம் !

--த .சத்தியமூர்த்தி 

 










Saturday, 10 April 2021

Maanudam Tharippom part-6

 மானுடம்  தரிப்போம்-6

அடிபட்டு  காகம்  ஒன்று  விழுந்துக்   கிடக்க 
கூட்டமாய்  காகங்கள்  கரைந்து  நின்று 
வட்டமாய்  பாதுகாப்பு  வளையம் அமைக்கிறது 

வீதியில்  அடிபட்டு  துடித்து  ஒருவன்  கிடக்க 
ஆளாளுக்கு  கைப்பேசி  மூலம்  படமெடுத்து  
பரப்பும்  அநாகரீகம்  மனித  வக்கிரத்தின்  உச்சம் 

பகலில்  சூரியனும் , இரவில்  வெண்ணிலவும் , நட்சத்திரங்களும் 
மனிதனின்  நடத்தையைக்  கண்காணிக்கிறது 

அதனால்  இருட்டில்  செய்யும்  தவறு  கூட 
அரங்கத்தில்  அம்பலத்தில்  அரங்கேறுகிறது 

நிழல்  கூட  நம்மை  விட்டு  விலகலாம் - ஆனால் 
நாம்  செய்யும்  பாவம்  ஒருபோதும்  விலகுவதில்லை 

மானுடம்  மட்டும்  தான்  மனிதனை  
இப்பிறப்பிலிருந்து  கரையேற்ற உதவும்  

உறக்கத்தில்  சுகம்  காணும்  
உடல்  விழிப்பதற்கு  முன்பே 

மனமே  நீ  விழித்துக்கொள் !!
மண்ணில்  வந்த  நோக்கம்  எதுவென்று 
நீ  தெரிந்து கொள் !!

மரம் , செடி , கொடி , போல்
மற்றவர்க்கு  உதவும்  கலையைக்  கற்றுக்கொள்  

பூரண  நிலவு  போல்  உன்  முகம்  பிரகாசிக்க 
உதவும்  பண்பை  உனதாக்கிக்கொள் 
   
வாழ்ந்த  பிறகும்  வரலாற்றை  சொந்தமாக்க
வாழும்  போது  வள்ளலாய்  வாழக்கற்றுக்கொள்

  --த .சத்தியமூர்த்தி 


 

Saturday, 3 April 2021

Maanudam Tharippom part-5

மானுடம்  தரிப்போம் -5 

ஏழைகளை  ஆதரிக்கும்  எண்ணம்  
எல்லோருக்கும்  வர வேண்டும்

வறியவர்க்கு  கொடுப்பதை  
வரமாகக்   கருத வேண்டும் 

பசியோடு  யாரும்  படுத்திடா  வண்ணம்  
அன்னமெனும்  அமுதமளித்து  
அரவணைக்க  வேண்டும்

வடலூரில்  வள்ளல் பெருமான்  ஏற்றி வைத்த
அடுப்பு  இன்றளவும்  அணையாமல் 
பாமரனின்   பசிப்பிணியை  அகற்றுகிறது 

அங்கொன்றும்  இங்கொன்றுமாக  அவ்வப்போது 
அரிதாக  மானுடம்  வெளிப்படுகிறது 

வந்தாரை  வாழவைக்கும்  தமிழ்  மண்ணில் 
எம்மக்கள்  எல்லோரும்  கருணை உள்ளம்
படைத்தவர்கள்  என்ற  பண்பு  நிலை 
எய்த  வேண்டும்  

நம்மைக்காக்க  இந்த  சமூகம்  உள்ளதென்று 
நலிந்தோர்கள்  நம்பிக்கையோடு 
 நடைபோட  வேண்டும் 
     
நமக்கென்ன  என்று  கடந்து  போகாமல் 
நம்மால்  முடிந்ததை    முனைப்போடு  செய்வோம் 
    
அடுத்தவர்க்கு  இயன்றளவு  உதவுவதை 
வழக்கமாக்கிக்  கொள்வோம்   
காலப்போக்கில் அதுவே 
பழக்கமாகிவிடும் ..

மானுடம்  தரிப்போம் 

---த .சத்தியமூர்த்தி